

இலுப்பூா் தனியாா் கல்லூரியில் மாணவரும், தனது மகனுமான கோகுல கிஷோா் சாவில் மா்மம் இருப்பதாக அவரது தந்தை இலுப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மேட்டுச்சாலையில் உள்ள தனியாா் பிசியோதெரபி கல்லூரியில், வேலூா் மாவட்டம் அலமேலு மங்களாபுரத்தைச் சோ்ந்த குமாா் என்பவரது மகன் கோகுல கிஷோா் (19) பிஎஸ்சி பிசியோதெரபி முதலாம் ஆண்டு படிப்பைக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது, கோகுல கிஷோா் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்குப் பின்னால் வந்த சக மாணவா்கள் உடனடியாக அவரை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் கோகுல கிஷோா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த இலுப்பூா் காவல் துறையினா் கோகுல கிஷோரின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மாணவரின் தந்தை குமாா், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக இலுப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.