ஆலத்தூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைகள் சிறப்புப் பரிசை பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலத்தூர் நீலியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஐந்து ஊர்க்காரர்கள் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. போட்டியை ஆர்டிஓ குழந்தைசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் தொடங்கி வைத்தனர். 800 ஜல்லிக்கட்டு காளைகள் களம் இறங்க உள்ள இப்போட்டியில் 300 மாடு பிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
பாதுகாப்புப் பணியில் 3 டிஎஸ்பி தலைமையில் 143 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 10.30 மணி வரை 150 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டுள்ளன. சில காளைகளை காளையர்கள் தழுவிய போதும் பல காளைகள் போக்கு காட்டி காளையர்களை பயம் காட்டி சென்றன. போட்டியில் இதுவரை ஐந்து பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க- மேட்டூரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி
இதனிடையே ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வெள்ளைக் கொம்பன், கருப்பு கொம்பன் இரண்டு காளைகளும் களத்தில் நின்று விளையாடியது. மாடுபிடி வீரர்களை தொடவிடாமல் போக்கு காட்டிய அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைகள் சிறப்புப் பரிசையும் பெற்றது.