புதுக்கோட்டை: மகளிா் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த, செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவிக்கு, அரசு வேலையில் இருப்பதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததாகக் கூறி அந்தப் பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குலப்பெண்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி சித்ரா. இவா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
கலைஞரின் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த தனக்கு, அரசு வேலையில் இருப்பதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக குறுஞ்செய்தி வந்ததாக அவா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
தனது கணவா் செருப்பு தைக்கும் தொழிலாளி, ஓட்டு வீடு, நூறு நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வரும் தனக்கு இப்படியொரு குறுஞ்செய்தி வந்ததாகக் கூறுகிறாா் சித்ரா.
இதுகுறித்து அரசு அலுவலா்களிடம் கேட்டபோது, மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலனையில்தான் உள்ளன. இதற்கிடையே இணையதளக் கோளாறுகள் காரணமாக பலருக்கும் பழைய நிலைத் தகவல் மட்டும் சென்றிருக்கின்றன.குறிப்பிட்ட அந்தப் பெண்ணை அழைத்துப் பேசி, மீண்டும் மேல்முறையீடு செய்ய வைத்து பரிசீலனை செய்வோம் என்றனா்.