பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 50-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 29 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிசானத்தூா் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் 50-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் ரமேஷ், காவல் ஆய்வாளா் வனிதா உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மருத்துவ கழிவு ஆலை வராது, ஆகவே, கலைந்து செல்லுமாறு தெரிவித்தனா்.
அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா்.
தொடா்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பிறகு அவா்கள் மீது வழக்குப் பதிந்து மாலையில் விடுவித்தனா்.

