தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மூவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து 89 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாச்சியார்கோவில் கடைவீதியில் சனிக்கிழமை இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் திருநரையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (41), திருமலைராஜபுரம் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் ஜெயசீலன் (45), மேலவிசலூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் நீலகண்டன் (45) என்பதும், இவர்களுக்கு நாச்சியார்கோவில் அருகே சம்பத்தனார்குடி பகுதியில் 2017 அக்டோபர் மாதத்தில் வீடு புகுந்து 50 பவுன் திருடப்பட்ட வழக்கிலும், திருச்சேறை அருகே செண்பகக்கொல்லை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் திருடிய வழக்கிலும், மருதாநல்லூரில் நடைபெற்ற வழிப்பறியிலும் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதில் நாச்சியார்கோவில் காவல்நிலையத்தில் பழைய குற்றவாளிகள் பதிவேட்டில் ரமேஷ் பெயர் உள்ளது.இதையடுத்து நாச்சியார்கோவில் போலீஸார், அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கிவைத்திருந்த ரூ. 22 லட்சம் மதிப்பிலான 89 பவுன் நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, ரமேஷ், ஜெயசீலன், நீலகண்டன் ஆகிய மூவரையும் போலீஸார் சனிக்கிழமை இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இவர்களை15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









