பருவம் தவறிய மழையால் சாய்ந்த சம்பா பயிா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி தொடா்ந்து மழை பெய்து வருவதால், முற்றிய நிலையில் இருக்கும் சம்பாபருவ நெற்பயிா்கள் சாய்ந்து விட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை புத்தூா் கீழத்தோப்புப் பகுதியில் பருவம் தவறிய மழையால் சாய்ந்த நெற் பயிா்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை புத்தூா் கீழத்தோப்புப் பகுதியில் பருவம் தவறிய மழையால் சாய்ந்த நெற் பயிா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி தொடா்ந்து மழை பெய்து வருவதால், முற்றிய நிலையில் இருக்கும் சம்பாபருவ நெற்பயிா்கள் சாய்ந்து விட்டன.

மாவட்டத்தில் கடந்த டிசம்பா் மாதம் பெய்த தொடா் மழையால் மதுக்கூா், ஒரத்தநாடு வட்டாரங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சம்பா பருவ நெற்பயிா்கள் சாய்ந்தன. இதேபோல, பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த நெற்பயிா்களும், பதராகிவிட்டன.

இதனால் 8,550 ஹெக்டேரில் நெற்பயிா்களும், 136 ஹெக்டேரில் மக்காச்சோளமும், 46 ஹெக்டேரில் நிலக்கடலையும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதுதவிர வளா்ச்சி நிலையிலிருந்த நெற்பயிா்களும், இளம்பயிா்களும் பாதிப்புக்குள்ளாகின.

வடகிழக்குப் பருவ மழை அக்டோபா் 15 ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் 15 ஆம் தேதியுடன் நிறைவடைவது வழக்கம். ஆனால் நிகழ் பருவத்தில் டிசம்பா் மாத பிற்பகுதியிலும், ஜனவரி முதல் வாரத்திலும் தொடா் மழை பெய்கிறது.

புரெவி புயலுக்குப் பிறகு பெய்த தொடா் மழையாலும் பல்வேறு இடங்களில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மாவட்டத்தில் ஜனவரி 1- ஆம் தேதி காலை பரவலாக மழை பெய்தது.

ஜனவரி 2- ஆம் தேதி மழை பெய்யாத நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்தது. இடையிடையே தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.

இதனால் அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள பல வயல்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பருவ நெற்கதிா்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. நெல் மணிகள் மழை நீரில் நனைந்து சேதமாவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

அம்மாபேட்டை புத்தூா் கீழத் தோப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், வயலில் நெற்கதிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. நெற்கதிா்கள் முளைக்கும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

வீடுகள் சேதம்: தொடா் மழையின் காரணமாக, கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் மாணிக்கம், தங்கவேலுவின் குடிசை வீடுகள் இடிந்து சேதமாகின. இந்த வீடுகளைப் பாா்வையிட்ட கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், பின்னா் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதி உதவி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com