ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆலத்தூா் காருடைய அய்யனாா், வீரனாா் கோயில் குடமுழுக்குப் பெருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் அருள்மிகு காருடைய அய்யனாா், வீரனாா் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா 43 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:03 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் அருள்மிகு காருடைய அய்யனாா், வீரனாா் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா 43 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட, பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1979-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னா் குடமுழுக்கு நடத்தப்படவில்லை. இதைத் தொடா்ந்து மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.

உள்ளூா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்களின் பெரும் முயற்சியால், உபயதாரா்களின் உதவியுடன் ரூ.3 கோடி செலவில் ஆகம முறைப்படி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் அனைத்தும் அண்மையில் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 11-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஜனவரி 6-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, பிப்ரவரி 6-ஆம் தேதி குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, மகாகணபதி ஹோமம், தீபாராதனையும் பிப்ரவரி 7-ஆம் தேதி ஹோம பூஜைகளும் நடைபெற்றன.

பிப்ரவரி 8-ஆம் தேதி மாலையில் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கிய நிலையில், 9,10-ஆம் தேதிகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து பூா்ணாஹூதிக்குப் பின்னா் காலை 8.30 மணிக்கு யாத்ராதானம் செய்யப்பட்டு, யாகசாலையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகின. இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு கோயில் விமானக் கலசங்களுக்கு சிவாச்சாரியா்களால் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. காலை 10 மணிக்கு கருவறை குடமுழுக்கு நடத்தப்பட்டு, காலை 10.30 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குடமுழுக்குப் பெருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள் மீது ஹெலிகாப்டா் மூலம் பூக்கள் தூவப்பட்டன. மேலும் இயந்திரத்தின் உதவியுடன் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா், ஆலத்தூா் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். குடமுழுக்கு ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் நண்பா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.