திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் மரம் குடமுழுக்கு விழா
By DIN | Published On : 03rd May 2022 02:59 PM | Last Updated : 03rd May 2022 02:59 PM | அ+அ அ- |

தஞ்சாவூர்: திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அட்சய திருதியை பெருவிழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடி மரம் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை பெருவிழா கொண்டாடப்பட்டது. ரோகிணி நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு உரிய பரிகாரத் தலமான இக்கோயில் இறைவி விளையாட்டாக சிவபெருமானின் திருவிழிகளை மறைத்தமையால் சாபம் ஏற்பட்டு கிளி ரூபமாகி அந்நிலை நீங்க அம்மை தை மாத மகர சங்கராந்தி காவிரியில் நீராடி சுயரூபம் அடைந்து சிவபெருமானை பூஜித்து தனது சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டதாக ஐதீகம்.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும். பழமை வாய்ந்த இக்கோயிலில் அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நட்சத்ரா குழுமத் தலைவரும், மத்திய பட்ஜெட் தயாரிப்பு குழு உறுப்பினருமான பொருளாதார நிபுணர் குரு.சம்பத்குமார் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் நிர்மாணம் செய்யப்பட்டு அதன் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். விழாவில் தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.