

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தற்கொலை முயற்சியைத் தடுக்க பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மனு கொடுக்க வரும் பொதுமக்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றிக் கொள்கின்றனர். இவர்களைக் காவல் துறையினர் மீட்டு, தற்கொலையிலிருந்து காப்பாற்றி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை காவல்துறையினர் பரிசோதித்து உள்ளே அனுமதித்து வந்தனர். இந்நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி மனு கொடுக்க வந்த பெண், ஆட்சியர் முன்னிலையிலேயே மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். இதுபோல இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால், குடிநீர் பாட்டில் என்ற பெயரில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் நிரப்பி எடுத்துக் கொண்டு உள்ளே செல்வதைத் தடுக்க பொதுமக்கள் திங்கள்கிழமை காலை கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து ஓரமாக அடுக்கி வைத்தனர். மனு கொடுத்த பிறகு வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது குடிநீர் பாட்டில்களை மீண்டும் எடுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.