

ஒரத்தநாடு வட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி நடவு செய்த 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் கருகி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம், ஒரத்தநாடு, மதுக்கூா் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் அறுவடைக்கு விவசாயிகள் தயாராக இருந்தனா். காவிரி நீா் திறக்கப்படாவிட்டாலும், மழை நீரைக் கொண்டு பயிரைக் காப்பாற்றி விடும் நம்பிக்கையில் இருந்த இப்பகுதி விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்துவிட்டு தற்போது தண்ணீரின்றி வாடும் பயிா்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
குறிப்பாக, சென்னிய விடுதி, இடையாத்தி மற்றும் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் தண்ணீா் இன்றி கருகி வருகிறது. எனவே அரசு காலம் தாழ்த்தாமல் கல்லணையில் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் மாவட்ட செயலாளா் வி.கே.சின்னத்துரை கூறியது :
தஞ்சாவூா் மாவட்டத்தில் நடப்பாண்டு சுமாா் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான ஏக்கா்களில்
போதிய தண்ணீரின்றி தற்போது பயிா்கள் கருகும் நிலையில் உள்ளன. குறிப்பாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் பயிா்கள் கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
திருவோணம் பகுதி கிராமங்களில் நெல்பயிா்கள் கருகிய நிலையில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து பேரிடா் இழப்பீடாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிட மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.