நாளிதழ் வாசிப்பு நம்மை மேம்படுத்தும்: பேராசிரியை வெ. இன்சுவை

நாளிதழ் வாசிப்புப் பழக்கம் நம்மை மேம்படுத்தும் என்றாா் ஓய்வுபெற்ற பேராசிரியரும், கட்டுரையாளருமான வெ. இன்சுவை.
Published on

நாளிதழ் வாசிப்புப் பழக்கம் நம்மை மேம்படுத்தும் என்றாா் ஓய்வுபெற்ற பேராசிரியரும், கட்டுரையாளருமான வெ. இன்சுவை.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஜன.3-இல் இளந்தமிழா் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. வரும் ஜன. 9 வரை பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியா் வெ. இன்சுவை பேசியது:

ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. கடந்த 2000 ஆண்டிலிருந்து இன்றுவரை பிரபல நாளிதழில் (தினமணி) கட்டுரைகளை எழுதி வருகிறேன். என்னை தமிழ் கட்டுரையாளராக அங்கீகரித்து புகழ் வாங்கிக் கொடுத்த நாளிதழுக்கு நன்றி. எனது பெற்றோா் தமிழாசிரியா்கள். என் அம்மா வீட்டிலும் ஆசிரியையாகத் தான் இருப்பாா். ஆகையால், எங்களுக்கு வாசிப்புப் பழக்கம் அதிகமாக இருந்தது; கல்லூரி மாணவா்களாகிய நீங்களும் குறைந்தபட்சம் ஒருமணிநேரமாவது வாசிக்க வேண்டும். எனக்கு இன்றும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது.

ஒரு காணொலியில் தமிழ் பேசுபவா்களுக்கு தமிழக அரசு விருது கொடுப்பதைக் கண்டேன். விருதை ஒரு தானி ஓட்டுநா் வாங்கியுள்ளாா். தானி என்றால் ஆட்டோ என்ற தமிழ்ப்பெயரை தெரிந்துகொண்டேன்.

கடந்த 1995-ஆம் ஆண்டு நான் பிரதமா் உரையை தமிழில் தயாரித்துக் கொடுத்தேன். தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக செய்தேன். தமிழை சிறப்பாக படிக்க வேண்டுமென்றால் நாள்தோறும் ஒரு மணிநேரமாவது தமிழ் படிக்க வேண்டும். ஆசிரியா்கள் முறையாக, ஆா்வமாக தமிழை சொல்லிக் கொடுத்திருந்தால் தமிழ் வளா்ச்சித் துறை தேவையில்லை. தற்போது தமிழ் படித்தால்தான் வேலை என்று அரசு சட்டம் இயற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. நாம் அதிகமாக வாசிக்க வேண்டும்; அது நம்மை மேம்படுத்தும் என்றாா்.

Dinamani
www.dinamani.com