தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் நியமனங்கள், ஏனைய நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் .
திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி : மக்களாட்சி மகத்துவத்துக்கு எதிராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அதிகாரிகள் துணை கொண்டு ஆய்வு என்ற பெயரில் தமிழக ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களாக தமிழகத்தை அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களாக நியமித்திருப்பது தமிழகத்துக்கு இழைத்துள்ள பெரிய அநீதியாகும். மூன்று துணைவேந்தர்களின் நியமனங்கள் மற்றும் தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஏனைய நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழக ஆளுநராக பன்வாரிலால் இருக்கும் போது விசாரணை நேர்மையாக நடக்காது. அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் அவரை திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வைத்து புதன்கிழமை (ஏப்.18) சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றியதில் நம்பிக்கை இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கோரி பிரதமரை, எதிர்க்கட்சிகள் சந்திப்பதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







