சரக்கு ரயில் போக்குவரத்தில், புதிய வாகனங்களை ஏற்றிச்செல்லும் வகையில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், ஆண்டுக்கு ரூ. 2,000 கோடி வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2.90 கோடி வாகனங்கள் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவை சந்தைப்படுத்தப்படுகின்றன. புதிய வாகன உற்பத்தியில் இருசக்கர வாகனங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. அதாவது மொத்த வாகன உற்பத்தியில் 76 சதவிகிதம் இரு சக்கர வாகனங்கள். நான்கு சக்கர வாகனங்கள் (கார்கள்) 16 சதவிகிதமும், 3 சக்கர வாகனங்கள் 4 சதவிகிதம், வர்த்தக வாகனங்கள் 4 சதவிகிதமும் அடங்கும் .
இவற்றை உற்பத்தி செய்யும் இடங்களிலிருந்து நாடு முழுவதும் உள்ள பிற இடங்களில் சந்தைப் படுத்த பெரும்பகுதி (சுமார் 96 சதவிகிதம்) சாலை மார்க்கமாகவும், மீதிமுள்ளவை ரயில் வழியாகவும் எடுத்துச் செல்லப்படுன்றன.
வாகனங்களை செல்வதில் ஆண்டுக்கு சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி கையாளப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 4 சதவிகிதம் மட்டுமே ரயில்வேக்கு கிடைத்து வருவதால் அதிகளவில் வாகனங்களை கொண்டு செல்லும் ஒப்பந்தங்களைப் பெற ரயில்வே முயற்சித்து வருகிறது.
இவற்றுக்கான வாடகையை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக குறைத்து அறிவித்துள்ளது. என்றாலும் வருவாய் பெருகவும், அதிகளவு வாகனங்களை ஏற்றி அனுப்பவும், பழைய ரயில் பெட்டிகளை அடுக்கு முறையில் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளாக உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது.
இது குறித்து சரக்கு ரயில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியது : சாதாரண (அடுக்கில்லா) சரக்கு ரயில் பெட்டிகளில் 125 கார்களைத்தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் ஈரடுக்கு கொண்ட பெட்டியில் 265 கார்களை எடுத்துச் செல்ல முடியும். எனவே அதற்கேற்ற வகையில் ரயில் பெட்டிகளை அடுக்கு பெட்டிகளாக மாற்றியமைப்பது அவசியமாகும். எனவேதான் இதனைக் கருத்தில் கொண்டு மொத்தம் 17 ரயில்களில் தலா 42 பெட்டிகள் ஈரடுக்கு கொண்டவையாக மாற்றம் செய்யவும், ஈரடுக்கு கொண்டவையாக புதிதாக 10 ரயில்களும் தயாரிக்க ரயில்வே அமைச்சகம் கடந்தாண்டு அனுமதியளித்துள்ளது. அதில் 4 ரயில்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 23 ரயில்கள் வரும் நிதியாண்டுக்குள் தயாரிக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஈரடுக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில்களை 28 மார்க்கங்களில் இயக்குவதற்கான வசதிகள் உள்ளன. அவற்றுடன் கண்டெய்னர் பெட்டிகளில் வாகனங்களை ஏற்றியனுப்பவும் ரயில்வே துறை அனுமதியளித்துள்ளது. அந்த வகையில் அவற்றின் மூலமும் வாகனங்கள் ஏற்றி அனுப்பப்படும். தமிழகத்தில் திருவள்ளூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 இடங்களில் ரயில்களில் வாகனங்களை ஏற்றி அனுப்பப்படுகிறது.
அதன்படி 2017-18 நிதியாண்டில் சுமார் ரூ. 100 கோடி ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது, 2016-17 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 16 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. அதே நேரம் வாகனங்கள் உற்பத்தியும் 14.78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதேபோன்று வளர்ச்சி விகிதம் உயரும் பட்சத்தில் இந்த வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ. 2,000 கோடி வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே புதிய வாகனங்கள் எடுத்துச் செல்லும் சரக்கு போக்குவரத்து சந்தையை கைப்பற்ற, ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்கின்றனர் அதிகாரிகள்.