திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் வட்டங்களில் பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மண்டலக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை இயக்குநருமான டாக்டர் என்.சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் நீர்வள ஆதாரத்துறையின் ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டத்தின் மூலமாக ரூ.3.33 கோடியில் 43 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கடந்த 3 நாள்களாகப் பார்வையிட்ட, மண்டலக் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் என்.சுப்பையன் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு செய்தார். திருவெறும்பூர் ஒன்றியம், ஆலந்தூர் கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் மயிலாயி குழுமி, சங்கரன் குழுமி, சுடுகாட்டு குழுமி ஆகியவற்றை புனரமைக்கும் பணிகளையும், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் கிராமத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்தாய்வின் போது, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள் திருமாறன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








