பயன்பாட்டுக்கு வராத  வண்ணத்துப்பூச்சிப் பூங்கா உள் பாதுகாப்பகம்

ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு போதிய பேருந்து வசதிகள்
Updated on
2 min read

ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், இவ்வளாகத்தில் கட்டப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளின்  உள்பாதுகாப்பகமும் திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது.
சுமார் 10 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டு,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இப்பூங்கா  2015-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
தவளை, தட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி, வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றின் வடிவ மாதிரிகள், நீருற்றுகள், நீர்த்தாவரங்கள், நீர்க்குட்டைகள்,மரப்பாலங்கள், பார்வையாளர்கள் சுற்றி வருவதற்கென நடைபாதை, வாகன  நிறுத்துமிடம்,  உணவகம்,  கழிவறை ஆகிய வசதிகளுடன் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் உணவுக்காக தேனைத் தரும் தாவரங்கள், காட்டாமணக்குச் செடிகள் இந்த வளாகத்தில் வளர்க்கப்பட்டுள்ளது. 
மேலும் இப்பூங்கா வளாகத்தில்  நட்சத்திர வனம், இனப்பெருக்க ஆய்வகம்,வனத்தோட்டம், மண்புழு உரமுற்றம், சிறுவர் பூங்கா,வானிலை மையம், வனத்தோட்டம் ஆகியவையும் அமைந்துள்ளது. 
பல்வேறு வசதிகளைக் கொண்
டிருந்தும் இப்பூங்காவுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதிகள் ஏதுமில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து ஆட்டோ அல்லது அவரவர் வாகனங்களில்தான் இப்பூங்காவுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு ஆட்டோவில் வந்தாலும் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது.
 இதுகுறித்து இயற்கை ஆர்வலரும், நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளருமான வழக்குரைஞர் தமிழகன் கூறியது:
ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் பூங்காவை பார்வையிட வருகிறார்கள். வருபவர்கள் அனைவருமே அவரவர் சொந்த வாகனங்களில் தான் இங்கு வர முடியும்.
பூங்கா திறக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில்,  சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக அரசுப் பேருந்து வசதி செய்து தரவில்லை.  சிற்றுந்து வசதி இருந்தாலும் அவை  இயக்கப்படும் நேரம் எப்போது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
 ஸ்ரீரங்கத்திலிருந்து 9 கி.மீ.  தொலைவிலுள்ள பூங்காவுக்கு வர மட்டுமே ஆட்டோ ஓட்டுநர்கள் ரூ.250 வரை வசூலிக்கின்றனர். திரும்பிச் செல்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். பூங்காவிற்கு வரும் சாலையும் மிகவும் மோசமாக உள்ளது.
ஸ்ரீரங்கத்திலிருந்து மேலூர் வரை வரும் அரசுப்பேருந்தை பூங்கா வரை விரிவாக்கம் செய்யுமாறு பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பூங்கா வளாகத்துக்குள் அமைந்துள்ள  வண்ணத்துப்பூச்சிகளுக்கான உள்பாதுகாப்பகம் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.
பூங்காவிற்கு வருவோர் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை.  பூச்சியியல் ஆராய்ச்சி தொடர்பான  ஆய்வுக்கூடம்,நூலகம், தகவல் தொகுப்பு மையம் ஆகியவையும் இப்பூங்காவுக்குள் அமைக்க வேண்டும். பேருந்து வசதி , பூங்காவுக்கு வருவோர் அருவியில் குளிப்பது போன்ற வசதி செய்து  தர வேண்டும் என்பது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
குழந்தைகளுக்கு மட்டும் உள்ள படகு வசதியை பெரியவர்களும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
 ரயில் நிலையம்,மத்திய பேருந்து நிலையம்,சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளில் வண்ணத்துப்பூச்சி பூங்கா இருக்கும் இடம்,பேருந்து வசதிகள் குறித்து போதுமான விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்றார் தமிழகன். கோடைக்காலமாக இருப்பதால் வண்ணத்துப் பூச்சிகளுக்கான உள்பாதுகாப்பகத்தை திறக்காமல் வைத்திருக்கிறோம்.வெயிலின் தாக்கம் காரணமாக வண்ணத்துப்பூச்சிகளின் வருகை குறைவாக உள்ளது.மழைக்காலத்தில் வருகை அதிகமாகும்.இருப்பினும் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளுக்கான உள்பாதுகாப்பகம் 15 நாள்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com