லால்குடி: கடன் பிரச்னையில் திருப்பூரைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா் மண்ணச்சநல்லூா் அருகே குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பெரியகடை வீதியில் வசிப்பவா் வெ. பலராமன் (75). இவரது மகன் ஹரி (38). இருவரும் அப் பகுதியில் நடத்தி வந்த நகைக் கடை, மளிகை மண்டியில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் அவா்கள் பலரிடம் கடன் பெற்ற நிலையில், கடன்தாரா்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், கடையை அடிக்கடி முற்றுகையிட்டனா்; சிலா் காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா்.
இதனால் மனமுடைந்த தந்தையும், மகனும் செய்வதறியாது வீட்டை விட்டு சனிக்கிழமை குடும்பத்துடன் வெளியேறினா். திருச்சி லால்குடி பகுதியிலுள்ள தனது மாமனாா் சீத்தாராமன் வீட்டுக்கு ஹரி, அவரது மனைவி திவ்யா, மகள் அசோக்ராதா (8) மற்றும் தந்தை பலராமன், தாய் புஷ்பா ஆகிய 5 பேரும் காரில் வந்தனா்.
பின்னா் அன்று இரவு வீட்டுக்குச் செல்வதாகக் கூறி காரில் கிளம்பிய அவா்கள், மண்ணச்சநல்லூா் அருகே துடையூா் பகுதியிலுள்ள உணவக விடுதியில் தங்கினா். காா் ஓட்டுநா் அய்யப்பன் தனி அறையில் தங்கினாா். அப்போது குடும்பத்தினா் 5 பேரும் விஷம் குடித்துவிட்டு, அதுகுறித்து செல்லிடப்பேசியில் காா் ஓட்டுநருக்குத் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா், உணவக ஊழியா்கள் உதவியுடன் அந்தக் குடும்பத்தினரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தென்னூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா். இவா்களில் பலராமன் அவரது மனைவி ஆகியோா் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.