

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மை பெற்றதும், இத்திருக்கோயிலை பூலோக வைகுந்தம், பூலோக சொர்க்கம், பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர்.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுந்த ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும். நடாப்பாண்டில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது.
இந்த ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. பகல் பத்து, இரா பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்படுவதை அடுத்து, பகல்பத்து விழா கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியது.
நாள்தோறும் கருவறையிலிருந்து காலை 7 மணிக்கு ரங்கநாதர் புறப்பட்டு, பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அப்போது அரையர்கள் திருமொழி பாசுரங்களை அபிநயத்துடன் பாட, அரையர் சேவை பொது ஜன சேவை நடைபெற்றது. பகல்பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பகல்பத்து விழாவின் பத்தாம் நாளான வியாழக்கிழமை நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில்,க்ஷ நம் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, இராப்பத்து நிகழ்வின் முதல் நாளான இன்று முக்கிய நிகழ்வாக சொர்க்க வாசல் என்கிற பரமபத வாசல் அதிகாலை 4.45மணிக்கு லக்னப்படி திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தங்க பல்லக்கில் எழுந்தருளி, ராஜமகேந்திரன் திருச்சுற்று, கொடிமரம் கடந்து, குலசேகரன் திருச்சுற்றில் விரஜா நதி மண்டபத்தில் வேத விண்ணப்பம் கேட்டு, சொர்க்க வாசல் எனும் பரமபத வாசலைக் கடந்து, ஆயிரம் கால் மண்டபத்தில் சேவை சாதித்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்தினங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் மூலம் வடக்கு வாயில் வழியே பெருமாள் உலா வந்தார்.
பெருந்திரளான பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதையும் நம்மால் காண முடியும். ஆனால் நிகழாண்டில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக இன்று காலை 8 மணி முதல் பரமபதவாசல் வழியாக நம்பெருமாளை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெருமாள் இந்த வாயில் வழியே வருவது வருடத்திற்கு ஒருமுறை என்பது குறிப்பிடத்தக்கது . தங்க பல்லக்கில் எழுந்த நம்பெருமாளின் முன்பாக தமிழ் மறை, திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை மனமுருகப் பாடிச் சென்றனர்.
பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்து, சொர்க்க வாசலைக் கடந்து வருகின்றனர். வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று முதல் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும், நடப்பாண்டில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நிகழாண்டில் இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் விழாவில் மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்ரீரங்கத்தில் 117 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
11 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2,500 காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறையும் செயல்பாட்டுக்கு வருகிறது. மூன்று இடங்களில் மருத்துவ முகாம், பல்வேறு பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளன.
5க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.