சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, திருச்சி காவல் சரகத்தில், பொதுமக்களிடம் நல்லுறவு பேணாத, 80 காவலர்கள் காவல் நிலைய பணியில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி புறநகர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய, 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள, மக்களிடம் நல்லுறவு பேணாத காவலர்கள் குறித்த பட்டியல் தயார் செய்ய, திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அடிமட்ட காவலர்கள் முதல், அதிகாரிகள் வரை, 180 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பொதுமக்களிடம் நேரடித் தொடர்பில் இருக்கும், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும், 80 பேர் காவல் நிலைய பணியில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒரு மாத காலம், 'பொதுமக்களுடன் நல்லுறவு மற்றும் உளவியல் குறித்த சிறப்பு பயிற்சி', உளவியல் நிபுணர்களை கொண்டு அளிக்கப்படுகிறது. இதில், பொதுமக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்வது? காவலர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்கு காரணம் என்ன? என்பது குறித்து கண்டறிந்து, உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட அளிக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பயிற்சியை தொடர்ந்து, 80 பேரும் படிப்படியாக மீண்டும் பணியமர்த்தபட உள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை மரண வழக்கில் காவல் துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனின் இந்த முன்மாதிரி முயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.