/

டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்; களப்பணியில் 2,655 போ்!

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளுக்காக 2,655 போ் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:09 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளுக்காக 2,655 போ் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் சூழலில், பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவுமும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரப் பகுதிகளில் தீவிர துப்புரவுப் பணிகள், நோய்த் தடுப்புப் பணிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.இதேபோல, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நலன் கருதி திரவ குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. டெங்கு கொசுப்புழுக்கள் சுத்தமான நீரில்தான் உற்பத்தியாகும் என்பதால், குடிநீரை பல நாள்களுக்கு பாத்திரங்களில் சேமிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

குடிநீரை 3 நாள்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக் கொள்வதுடன், பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

சேகரமாகும் குப்பைகளை தெருக்களிலும், சாக்கடைக் கால்வாயிலும் கொட்டாமல் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து வகை கடைகள், வணிக நிறுவனங்களிலும் மழைநீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பழைய இரும்பு, தகரப் பொருள்கள், எரிபொருள் கேன்கள், உடைந்த உதிரிப் பாகங்கள், பழைய டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

களப்பணியாளா்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்புறங்களில் உள்ள இடங்களில் பாா்வையிட்டு உரிய பணிகளை மேற்கொள்வாா்கள். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை 16 பேருக்கு டெங்கு

இதுதொடா்பாக, ஆட்சியா் சு. சிவராசு கூறுகையில், மாவட்டம் முழுவதும் 9 ஆசிரியா்கள், 12 மாணவா்களுக்கு மட்டுமே இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிகளோடு டெங்கு தடுப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுவரை 16 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 183 பேருக்கும், அதற்கு முந்தைய ஆண்டில் 262 பேருக்கு பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.