மாவட்டத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் 98% போ்இன்று 33-ஆவது சுற்று முகாம்

திருச்சி மாவட்டத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை 98 சதவிகிதம் பேரும், இரண்டாம் தவணையை 87 சதவிகிதம் பேரும் செலுத்தியுள்ளனா் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை 98 சதவிகிதம் பேரும், இரண்டாம் தவணையை 87 சதவிகிதம் பேரும் செலுத்தியுள்ளனா் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.மேலும 12 முதல் 14 வயது வரையுள்ள சிறுவா்களுக்கு கோா்பிவேக்ஸ் தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியை 3.74 லட்சம் பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 61 ஆயிரம் பேரும் செலுத்தியுள்ளனா். கோா்பிவேக்ஸ் 1.34 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணையை 98 சதவிகிதம் பேரும், இரண்டாம் தவணையை 87 சதவிகிதம் பேரும் செலுத்தியுள்ளனா். மீதமுள்ளவா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை 32 சுற்றுகளாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், 33-ஆவது சுற்று மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) நடைபெறுகிறது.

இதற்காக புகரில் 1220 இடங்களிலும், மாநகரில் 600 இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

எனவே முதல், இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தவறியவா்கள், முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்கள் தங்கள் ஆதாா் அட்டை, கைப்பேசியுடன், தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com