திருச்சி: கடந்த 2018-ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த வழக்கு திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் எண்-6 ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வெளியே வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாரிதாஸ், சவுக்கு சங்கர், கார்த்திக் கோபிநாத் போன்றோர் திமுகவை எதிர்த்து பேசுவதால் கைது செய்கின்றனர். ஆனால் எங்களை திமுகவினர் விமர்சிக்கின்றனர் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும்.
சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் முதல்வர் சட்டம் ஒழுங்கு அருமையாக உள்ளது என்கிறார். பேரறிவாளன் விடுதலையை கொண்டாட வேண்டியது இல்லை என்று அண்ணாமலை சொல்கிறார். ஆனால் பிரதமர் மோடி, அமித்ஷாக்கு குஜராத் கலவரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்ற கருத்தை அண்ணாமலை எப்படி பார்க்கிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 25 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, 8 வருடத்தில் ஏன் ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை என்றார்.
10 ஆண்டுகளில் அதிமுக செய்த ஊழலை 1 வருடத்திலேயே திமுகவினர் செய்துவிட்டதை தான் ஓராண்டு கால சாதனையாக பேசி வருகின்றனர்.
எல்லா படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு எழுதச் சொல்பவர்கள் முதலில் அவர்கள் எழுத வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் முதலில் தேர்வு எழுதட்டும்.
தமிழகத்தின் பாஜக வளர்ச்சி குறித்தக் கேள்விக்கு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாமல் எங்களை போன்று பாஜக தனித்து போட்டியிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் சொல்லிய கருத்தை மதிக்கிறேன் மற்றும் ஏற்கிறேன் என்றார்.