மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வளைகாப்பு அம்மன் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வணிக வைசிய சங்கம் சார்பில் 122-ம் ஆண்டு பெருந்திருவிழா டிச.29-ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் வியாழக்கிழமை பகவதி அம்மனுக்கு லட்சக்கணக்கான வளையல்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கம்பத்திற்கு பூஜைகள் செய்யப் பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.