திருச்சி ஆ.கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஆலய திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது.
திருச்சி மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் அருகாமை மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 700-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர். போட்டியினை ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 25, 25 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர். வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளைகள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி அவருடைய 2 காளைகளை அவரே வாடிவாசலில் அமர்ந்து அவிழ்த்துவிட்டார். 2 காளைகளும் பிடிபடாமல் வெற்றி பெற்றது.