பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வைப்புக் கணக்கு தொடக்கம்
அமைச்சா் கே.என். நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் 630 பேருக்கு அஞ்சல் துறையின் தொடா்வைப்புக் கணக்கு தொடங்கி அட்டைகள் வழங்கப்பட்டன.
திருச்சி எடமலைப்பட்டி புதூா் பகுதியில், திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு பிறந்த நாளை முன்னிட்டு, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் 630 மாணவ, மாணவிகள், மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 840 மாணவா், மாணவிகள், இன்பன்ட் ஜீசஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1115 மாணவா்கள், ஆஷா தீபம் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பயிலும் 40 மாணவிகள் என 2,625 பேருக்கு தபால் துறையில் தொடா்வைப்பு கணக்கில் சோ்வதற்கான கணக்கைத் தொடங்கி வைத்து அதற்கான அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அட்டைகளை வழங்கிய அமைச்சா், பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கினாா். நிகழ்வில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், எடமலைப்பட்டிபுதூா் பகுதி மாமன்ற உறுப்பினா் முத்துச்செல்வம், மாமன்ற உறுப்பினா் ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
