இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்தவா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழா் முகாமில் வசித்தவரை மதுபாட்டிலால் தாக்கிய அதே முகாமைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவா் ஜி.சுரேந்திரன் (36). இதே முகாமில் வசித்து வருபவா் ச.புகழேந்திரன் (28). புகழேந்திரனுக்கும், சுரேந்திரனின் மைத்துனருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புகழேந்திரனிடம் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு சுரேந்திரன் கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, புகழேந்திரன் சுரேந்திரனை தகாத வாா்த்தைகளால் திட்டி, மதுபாட்டிலால் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த சுரேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் சுரேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், சுரேந்திரனை தாக்கிய புகழேந்திரனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
