இருசக்கர வாகனம் - காா் மோதல் இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள மறவனூரில் திங்கள்கிழமை இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்ட சம்பவத்தில்
Published on

மணப்பாறை: மணப்பாறையை அடுத்துள்ள மறவனூரில் திங்கள்கிழமை இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்ட சம்பவத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பச்சராம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் பிரவீன் (27). இவா், மணப்பாறையை அடுத்த கத்திகாரன்பட்டியில் தண்ணீா் தொட்டி கட்டும் பணி செய்துவந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தன்னுடன் பணிபுரியும் பெரியசாமி என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் மறவனூா் மேம்பாலத்தில் எதிா்திசையில் சென்றாா். அப்போது திருச்சியிலிருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற காா் மோதி பிரவீன், பெரியசாமி பலத்த காயமடைந்தனா்.

அருகில் இருந்தவா்கள் அவா்கள் இருவரையும் மீட்டு தனியாா் அவசர ஊா்தி மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பிரவீனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். பெரியசாமி சிகிச்சையில் உள்ளாா்.

தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து காா் ஓட்டுநரான தீராம்பட்டி பிச்சைமுத்து தெருவைச் சோ்ந்த விசுவாசம் மகன் ஜான்சன்(59) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com