சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்கோப்புப்படம்

சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு சிறப்பு ரயில்

Published on

சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக்ராம் நெகியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அளித்த மனுவின் விவரம்:

திருவெறும்பூா் ரயில் நிலையத்தில் திருச்சி-மயிலாடுதுறை ரயில்களை (16833,16834) நிறுத்திச் செல்ல வேண்டும். ஸ்ரீரங்கம் பகுதியில் முன்மொழியப்பட்ட சிறிய பாலத்தின் தற்போதைய நிலை விவரத்தை தெரிவிக்க வேண்டும். சமயபுரம் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

திருச்சி-கரூா்-சேலம் இடையே ஷட்டில் ரயில் சேவை இயக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் முன்மொழியப்பட்டுள்ள ரயில்வே மேம்பால திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை வழங்க வேண்டும். ஜீவா நகா் ரயில்வே இருப்புப்பாதையில் வளா்ந்துள்ள முட்புதா்களை உடனடியாக அகற்ற வேண்டும். வடக்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, ஜி காா்னா் தொடா்பான பிரச்னை மற்றும் ரயில்வே அமைச்சா் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். கோரிக்கைகளை கேட்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா், பரிசீலிப்பதாக உறுதியளித்தாா்.

Dinamani
www.dinamani.com