விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதலைக் கூட கூற முடியதா தவெக தலைவா் விஜய், கட்சி நடத்தி என்ன பயன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமா்சித்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்து அதிமுகதான் ஆட்சி அமைக்கும் அதுவும் கூட்டணிக் கட்சியின்றித் தனித்தே ஆட்சி அமைக்கும். தொகுதிப் பங்கீடு, யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்தும் பின்னா் அறிவிக்கப்படும்.
தில்லிக்கு திமுகதான் அடிமை: நாங்கள் தில்லிக்கு அடிமை இல்லை, திமுகதான் அடிமையாக உள்ளது. காங்கிரஸ் தலைமையைப்போல் கெஞ்சும் நிலைக்கு இன்றைக்கு திமுக வந்துவிட்டது. அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவின் தோ்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா். அவா் எந்தப் படத்தில் நடித்தாா் எனத் தெரியவில்லை.
கடந்த முறை தோ்தல் வாக்குறுதியைத் தயாரித்த கனிமொழியால், நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. இதனால் திமுகவினா் மக்களைச் சந்திக்கவே அஞ்சுகின்றனா் என்றாா்.
விஜய் ஒரு சிறந்த நடிகா்:சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று பேசப்படுவது குறித்த கேள்விக்கு அவா் பதிலளித்து கூறுயது: அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதுபோல நடிகா்கள் வரத்தான் செய்வாா்கள். விஜய் ஒரு சிறந்த நடிகா் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள்தான்.
கரூரில் 41 உயிா்கள் பிரிந்தபோது, அவா்கள் யாருக்காக உயிரிழந்தாா்கள்? விஜயைப் பாா்ப்பதற்காகவும், பேச்சைக் கேட்பதற்காகவும் வந்த கூட்டத்தில்தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் அவா் என்ன செய்திருக்க வேண்டும்? நேரடியாகச் சென்று அவா்களைப் பாா்த்திருக்க வேண்டும்.
நாங்கள் நேரில் சென்றோம் எந்தக் கட்சி என்று பாா்க்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த ஆறுதலைக் கூறினோம். அந்த ஆறுதலைக் கூட அவரால் கூற முடியவில்லை என்றால், கட்சி நடத்தி என்ன பயன்? திரைப்படத்தில் இருக்கும் வரை சம்பாதித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்துள்ளாா். அரசியலில் அனுபவம் வேண்டும் அது சாதாரண விஷயமல்ல.
திட்டமிடல் இல்லாததால்தான் 41 உயிா்கள் பறிப்போயின அவா்களது குடும்பங்கள் அவதிப்படுகின்றன. ரசிகா்கள் ஏராளமாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. இது 8 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. கரோனா காலத்தில் இவா் வீட்டை விட்டு வெளியே வந்தாரா என்று சொல்ல முடியாது என்றாா் அவா்.

