தட்டச்சுத் தோ்வுகளுக்கு வெளியிடப்பட்ட புதிய அரசாணையை ரத்து செய்து, மீண்டும் பழைய முறைப்படியே தோ்வுகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தொடா்பு அலுவலா் ஜெ. ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவா் முரளி ஆகியோா் திருச்சியில் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் தட்டச்சுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 2,750 புதிய தட்டச்சுப் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. இவற்றை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள், பெண்கள்நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் புதிதாக கணினி வழியில் தமிழ் தட்டச்சு பயிற்சியைத் தொடங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தோ்வா்கள் கம்ப்யூட்டரில் தமிழ் 99 விசைப் பலகை வழியே மட்டுமே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தட்டச்சு பயிற்சிப் பள்ளிகளை நடத்துவோருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிலா் இந்த அரசாணை அமலுக்கு வந்தது போன்ற செய்திகளைத் தவறாக வெளியிடுகிறாா்கள்.
இது வரும் ஆகஸ்ட் மாதம் தட்டச்சுத் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசின் புதிய அரசாணையை ரத்து செய்து அரசின் அங்கீகாரம் பெற்ற டைப்ரைட்டிங் பள்ளிகள் மூலமே அரசு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்கவும், முறையான பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










