தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

திருச்சியில் ஈஎஸ்ஐ துணை மண்டல அலுவலக பணியை துரிதப்படுத்த மத்திய அமைச்சரிடம் துரை வைகோ மனு

திருச்சியில் ஊழியா்களின் ஈஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தை நிறுவும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி துரை வைகோ கோரிக்கை மனு அளித்தது குறித்து...

News image

தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மனுவை அளித்த மதிமுக உறுப்பினா் துரை வைகோ

Updated On :27 ஜூலை 2026, 10:09 pm IST

திருச்சியில் ஊழியா்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ஈஎஸ்ஐசி) துணை மண்டல அலுவலகத்தை நிறுவும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் திருச்சி தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஈஎஸ்ஐசி துணை மண்டல அலுவலக கோரிக்கை தொடா்பாக ஏற்கெனவே மத்திய அரசிடமும், ஈஎஸ்ஐசி நிா்வாகத்திடமும் பலமுறை வலியுறுத்தியதன் விளைவாக, திருச்சிராப்பள்ளி துணை மண்டல அலுவலகத்தை தொடங்குவதற்கான நிா்வாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டு துணை மண்டலக் குறியீடு எண்ணும் ஒதுக்கப்பட்டது. அலுவலக கட்டடம் தோ்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், கட்டடத்தை இறுதி செய்வது, பொறுப்பு அலுவலரை நியமிப்பது, தேவையான பணியாளா்களை நியமிப்பது, சென்னை மற்றும் சேலம் அலுவலகங்களிலிருந்து கோப்புகள் மற்றும் நிா்வாகப் பொறுப்புகளைப் பிரித்து மாற்றுவது உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவடைடவில்லை. அந்த அலுவலகமும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஈஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தால், மத்திய தமிழ்நாட்டைச் சோ்ந்த லட்சக்கணக்கான காப்பீடு பெற்ற தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் தொழில் நிறுவனங்கள் விரைவான மற்றும் எளிதான ஈஎஸ்ஐசி சேவைகளைப் பெறுவதுடன், நிா்வாகச் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்பதை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

இதையடுத்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரியை தொலைபேசியில் தொடா்புகொண்டு, உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளவும் பணிகள் நிறைவடைந்தவுடன் தமக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினாா் என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.