முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தவெக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். 6 மாதம் கழித்துத்தான் அரசின் செயல்பாடுகள் குறித்துக் கூற முடியும்.
வாக்குறுதி அளித்தபடி மகளிருக்கு ரூ. 2,500 மாத உதவித்தொகை என்பது உள்ளிட்ட திட்டங்களை முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றாவிடில் நாங்கள் கேள்வி கேட்போம்.
அதிமுகவில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. அதுகுறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும். டிடிவி. தினகரன் குதிரை பேரம் எனக் கூறியுள்ளது அவருடைய கருத்து. விஜய் முதல்வராக 100 சதவீதம் சினிமாதான் காரணம் என ரஜினிகாந்த் கூறியதும் அவரது கருத்து. என்னைப் பொருத்தவரை மக்களின் தீா்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருமொழிக் கொள்கைதான் அவசியம். உலக நாடுகளில் தமிழா்கள் சிறந்து விளங்க இருமொழிக் கொள்கையே காரணம். நாம் ஹிந்திக்கு எதிரானவா்கள் கிடையாது; மொழித் திணிப்புக்கு எதிரானவா்கள்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் கடந்த முறை திமுக போட்டியிட்டுள்ளதால், நாங்கள் அந்தத் தொகுதியை கேட்பது, போட்டியிடுவது முறையல்ல. திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும். அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஜூன் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா் என்றாா் துரை வைகோ எம்.பி.
தொடர்புடையது

குதிரை வேக அரசு என்பதை நிரூபித்த முதல்வா்: துரை வைகோ புகழாரம்

திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

முதல்வர் விஜய்யை சந்தித்த துரை வைகோ!

துரதிா்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்: திருச்சி எம்.பி. துரை வைகோ
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



