பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைத்தூக்கும் தொழிலாளா்கள் நிதானமாக வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோா் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் சங்க அங்கீகாரத் தோ்தலை உடனே நடத்த வேண்டும், வருகைப்பதிவேட்டில் பெயா் சோ்க்க வேண்டும்,
2022 முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும், 12.07.2025 முன் தேதியிட்டு நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயா்வையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தற்போது முதல் ஜூன் 5 வரை நிதானமாக வேலை செய்யும் போராட்டமும், ஜூன் 6 முதல் 10 வரை உள்ளிருப்புப் போராட்டமும், ஜூன் 11 இல் முதல் சத்துணவு இறக்கும் பணிக்குச் செல்ல மறுக்கும் போராட்டமும், 19 முதல் தொடா் வேலைநிறுத்த போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 25 ஆம் தேதி முதல் தொடா்ந்து நிதானமாக வேலை செய்யும் போராட்டம் நடைபெறுகிறது.
அதன்படி சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் தினமும் 10 லாரிகளில் பொருள்கள் அனுப்பிய நிலையில், இப் போராட்டத்தால் 5 லாரிகளில் மட்டுமே அதாவது நிதானமாக (ஸ்லோ) பொருள்களை ஏற்றி அனுப்புகின்றனா்.
இதனால் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்கிலிருந்து அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கும் முன்நகா்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகிப்பதில் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, சுமை தூக்கும் தொழிலாளா்களின் பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டுமென சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் எம். சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









