புதுப் பொலிவு பெறும் வனப் பகுதி

குடியாத்தம், ஏப். 26: குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் சுமார் 4 ஆயிரம் மரங்களுடன் அமைந்துள்ள வனப் பகுதியை பொலிவு படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது.   குடியாத்தம் ந
Updated on
2 min read

குடியாத்தம், ஏப். 26: குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் சுமார் 4 ஆயிரம் மரங்களுடன் அமைந்துள்ள வனப் பகுதியை பொலிவு படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது.

  குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் காட்பாடி சாலையில் 30.52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கல்லப்பாடி காப்புக் காட்டுக்குச் சொந்தமான வனப் பகுதி. இந்த வனப் பகுதியில் 2,306 புளிய மரங்கள், 551 செம்மரங்கள், 1,000-க்கும் மேற்பட்ட ஆச்சான், துரிஞ்சி, வேப்பன், காட்டு எலுமிச்சை உள்ளிட்ட மரங்கள் உள்ளன.

  வனப் பகுதியில் நடைமுறையில் உள்ள வனச் சட்டங்கள் இங்கு நடைமுறையில் இருந்தாலும், நகரை ஒட்டி உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் இதை காலைக் கடன் கழிக்கும் இடமாக மாற்றி விட்டனர். மேலும் இந்த வனப் பகுதியின் நான்கு பக்கமும் திறந்த வெளியாக உள்ளதால் சூதாட்டம் ஆடவும், மது அருந்தவும் சமூக விரோதிகள் இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வனப் பகுதிக்கு பின்பக்கம் வசிப்பவர்கள் இதன் நடுவே சாலை அமைத்து பொதுப் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வனப் பகுதியின் மத்தியில் ரூ. 3.63 லட்சத்தில் வனச் சரக அலுவலர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அதன் அருகில் வன ஊழியர்களுக்கான கூட்ட அரங்கு தற்போது கட்டப்பட்டு வருகிறது.

குடியாத்தம் வனச் சரகத்தில் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் என மொத்தம் 42 பேர் பணிபுரிகின்றனர். குடியாத்தம் வனச் சரக அலுவலகம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த வனப் பகுதியின் நடுவில் ஒருங்கிணைந்த வனச் சரக அலுவலக வளாகம் கட்டவும், இந்த பகுதியை பொலிவு படுத்தும் நடவடிக்கைகளையும் வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சுற்றிலும் முள்கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியாத்தம் வனச் சரக அலுவலர் எம். மகேந்திரன் கூறியது:

  சமூக விரோதிகளின் புகலிடமாகத் திகழும் இந்த வனப் பகுதியை மேம்படுத்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின்பேரில் இந்த வனப் பகுதியின் மத்தியில் வனச் சரக அலுவலகம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலூர் மண்டல வனத்துறைக்கு புதிதாக கட்டடங்கள் கட்ட தமிழக அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.13 கோடியில் ஒரு தொகை இங்கு கட்டடம் கட்ட ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து இங்கு மரப் பூங்கா அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

  மேலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்லும் வகையில் இதன் ஒரு பகுதியில் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது. நடைப்பயிற்சி செல்பவர்கள் வனத் துறையிடம் அடையாள அட்டை பெற்ற பிறகு இங்கு நாள்தோறும் வாக்கிங் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார் மகேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com