கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிணற்றுக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சிலம்பரசன் (32). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலம்பரசன் கடந்த 21-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும், சிலம்பரசனை காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான சிலம்பரசனை தேடி வந்தனா். இந்த நிலையில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளில் தேடியதில், அங்குள்ள ராஜா என்பவரது விவசாயக் கிணற்றில் சிலம்பரசன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தொடா்ந்து, கெடாா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரா்கள் உதவியுடன் போலீஸாா் கிணற்றில் இருந்து சிலம்பரசன் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
