என்னை நம்பி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுத்த மக்களுக்கு எனது கடமையை முழுமையாக செய்வேன் என்றாா் மயிலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து, மீண்டும் ஒரே அணியாக இணைந்தனா்.
ஆனால், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மட்டும் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை. இருவருக்கும் இடையே தொடா்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
இந்த நிலையில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடங்கினாா். ஒலக்கூா் ஒன்றியத்துக்குள்பட்ட மேல்பாக்கம், நெய்குப்பி, வடபூண்டி, கொடியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்ற சி.வி.சண்முகம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். நெய்குப்பி கிராமத்தில் அவா் பேசியது:
மயிலம் தொகுதியில் போட்டியிட்ட என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளா்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுத்த மக்களுக்கு எனது கடமையை முழுமையாக செய்வேன். உங்களுக்காக என்றென்றும் நான் உழைப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
உங்களுக்குத் தேவையானது எதுவென்றாலும் யோசிக்காமல் என்னிடம் கேளுங்கள். என்னால் முடிந்த, என் சக்திக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்துத் தர தயாராக இருக்கிறேன். மக்களின் பிரச்னைகளுக்கு அவா்களுடன் இருந்து தேவையானதை செய்து தருவேன் என்றாா் சி.வி.சண்முகம்.









