
தொழிலதிபர் வீட்டில் குண்டுவீச்சு
தொழிலதிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் செல்வம் (53). திருப்பாதிரிபுலியூரில் நகைக் கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை நள்ளிரவு இவரது வீட்டின் முன் மர்ம பொருள் வெடித்த சப்தம் கேட்டதாம். இதனையடுத்து செல்வம் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, சிலர் அங்கிருந்து ஓடியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து செல்வம் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும், இதனால் வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால், வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு எதுவும் வீசப்படவில்லை. பட்டாசு வெடித்தது போல் உள்ளது. எனினும் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக நிர்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
குறிஞ்சிப்பாடி அருகே பாமக மாநில நிர்வாகிக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தர்மா என்ற தர்மலிங்கம் (45). பாமக மாநில துணைப் பொதுச் செயலராக
உள்ளார். புதன்கிழமை இவரது வீட்டுக்கு கடிதம் வந்ததாம். அதில், குறிஞ்சிப்பாடி தொகுதியில் நீ போட்டியிடக் கூடாது. வரும் 5ஆம் தேதி உனது வீடு மற்றும் காரில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரி குறித்து விசாரித்ததில் போலியானது எனத் தெரியவந்ததாம்.
இதுகுறித்து தர்மலிங்கம் அளித்தப் புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மர்மச் சாவு
பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் வட்டம் டி.பவளங்குடி வெள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் குமார் மனைவி மீனா (28). கணவரை இழந்த இவர், கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். புதன்கிழமை வேலைக்குச் சென்று வீடு திரும்பியவர், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் மூ.முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






