குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வறட்சியால் கருகும் நெல் பயிர்கள்!

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிலவும் கடும் வறட்சியால் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிர்கள் கருகி வருகின்றன.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிலவும் கடும் வறட்சியால் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிர்கள் கருகி வருகின்றன.
 நீர், மண் வளம் சார்ந்த இந்த வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 குறிஞ்சிப்பாடி, அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. என்எல்சி சுரங்க நீர் மற்றும் ஏரிப் பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
 கடும் வறட்சி நிலவி வரும் தற்போதைய சூழலில், இந்தப் பகுதியில் நீரின்றி சுமார் 400 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
 குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, வரதராஜன்பேட்டை, குறுவப்பன்பேட்டை, பூதம்பாடி, ரெட்டிப்பாளையம், புதுப்பேட்டை, ஓணாங்குப்பம், ராசாக்குப்பம், கல்குணம் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தண்ணீரின்றி பயிர்கள் தற்போது கருகி வருகின்றன. இந்தப் பகுதியில் சுமார் 300 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் ஏரி, என்எல்சி சுரங்க நீரை நம்பி நெல் பயிரிட்டுள்ளனர். வறட்சியின் காரணமாக ஏரியில் தண்ணீர் இல்லை. என்எல்சி சுரங்க நீர் வரும் வாய்க்கால் தூர்வாரப்படாததால், தண்ணீர் வரும் வழியிலேயே வற்றிவிடுகிறது. மேலும், வாய்க்கால் ஓரம் நிலம் வைத்துள்ள சிலர் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிடுகின்றனர். குறிஞ்சிப்பாடி பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் என்எல்சி சுரங்கம் இருந்தபோது இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படவில்லை. தற்போது, வடலூர் அருகே உள்ள பகுதி வரை சுரங்கம் விரிவடைந்துவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆழ்துளைக் கிணறை 200 அடிக்கு அமைத்தாலும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
 மேலும், மும்முனை மின்சாரமும் முறையாக வழங்கப்படுவதில்லை. மும்முனை மின்சாரம் வரும்போது அனைத்து மின் மோட்டார்களும் ஒருசேர இயக்கப்படுவதால் மின்மாற்றி பழுதடைந்துவிடுகிறது. முன்னர் பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினர். தற்போதைய நிலையில் மழை பெய்தால் மட்டுமே நெல் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.
 இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இன்னும் 2 வாரங்களில் பூ எடுக்க வேண்டிய நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாததால் வளர்ச்சி குன்றியுள்ளன. கடும் சிரமங்களுக்கு இடையே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைவித்த நெல் பயிர்கள் கருகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே, எங்களது நிலையை உணர்ந்து, மும்முனை மின்சாரம் வழங்கும் கால அளவை அரசு உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com