நெய்வேலியில் இருந்து கடலூர், கோவை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. நகரியப் பகுதியில் உள்ள 30 வட்டங்களில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இவர்கள் நெய்வேலியில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல பெரும்பாலும் பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனர். ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும்.
நெய்வேலி நகரியத்தில் வசிப்பவர்கள், என்.எல்.சி.யில் பணிபுரிவோரின் வசதிக்காக நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, மதுரை, நெல்லை, சேலம் மாவட்டங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அண்மை காலமாக நெய்வேலியில் இருந்து இயக்கப்படும் பல அரசுப் பேருந்துகளின் சேவை திருப்திகரமாக இல்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக, நெய்வேலியில் இருந்து கோவைக்கு இரவு 9.30 மணியளவில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவையை ஓராண்டுக்கு முன்னர் நிறுத்திவிட்டனர். இதேபோல, நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு இயக்கப்பட்ட (தடம் எண் 212) அரசுப் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நெய்வேலி - கடலூர் இடையே நாள் ஒன்றுக்கு 4 முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து சேவையை நிர்வாகம் திடீரென நிறுத்திவிட்டது. இதனால், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி, கடலூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதேபோல, திருப்பத்தூரில் இருந்து வரும் அரசுப் பேருந்து (தடம் எண் 500) நெய்வேலி ஆர்ச் கேட் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று சிதம்பரம் சென்றடையும். ஆனால், இந்தப் பேருந்து கடந்த இரண்டரை மாதங்களாக மத்திய பேருந்து நிலையத்தை புறக்கணித்து ஆர்ச் கேட் வழியே நேரடியாக இயக்கப்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
மேலும், பண்ருட்டி - நெய்வேலி இடையே இயக்கப்பட்ட நகரப் பேருந்துகளில் பலவற்றை திடீரென எல்எஸ்எஸ் பேருந்துகளாக மாற்றிவிட்டனர். முன்னர் இந்தப் பேருந்துகள் ஆர்ச் கேட், இந்திரா நகர் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தன. தற்போது, எல்எஸ்எஸ் பேருந்தாக மாற்றியதால் இந்திரா நகரை புறக்கணித்து ஆர்ச் கேட் வழியாக இயக்கப்படுகின்றன. மேலும், பண்ருட்டி - நெய்வேலி நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பல நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் முக்கிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. சாதாரண நகரப் பேருந்துகளை எல்எஸ்எஸ் என மாற்றி இயக்குகின்றனர். எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என்ற பெயர்களில் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இது தனியார் பேருந்துகளின் வருவாய்க்கு வழிவகுக்கும். எனவே, என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.