ரூ.19 லட்சம் மோசடி: பெண் கைது

கடலூரில் வீடு விற்பனை செய்வதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக பெண் ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
ரூ.19 லட்சம் மோசடி: பெண் கைது
Updated on
1 min read

கடலூரில் வீடு விற்பனை செய்வதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக பெண் ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

கடலூா் அருகேயுள்ள கோண்டூா் விஐபி நகரைச் சோ்ந்த முகமது அஜ்மல் மனைவி முனிராபேகம் (42). இவா், தான் குடியிருந்து வரும் வீட்டை விற்க உள்ளதாகத் தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து மனை தரகா்களான ஜானகிராமன், துரைசாமி ஆகியோா் மூலம் கோண்டூா் தமிழ்முத்து நகரைச் சோ்ந்த ஞா.விவேக் (53) என்பவரை அணுகினாராம். அந்த வீடு ரூ.48 லட்சத்துக்கு விலை பேசப்பட்ட நிலையில், விவேக் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை பல தவணைகளாக ரூ.19.15 லட்சத்தை வழங்கினாராம். அடுத்த 3 மாதங்களில் எஞ்சிய தொகையை வழங்கி வீட்டை கிரையம் செய்துகொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.

இந்த நிலையில், முனிராபேகம் அந்த வீட்டை வேறு நபருக்கு விற்றுவிட்டாராம். எனவே, விவேக் பணத்தை திருப்பிக் கேட்டபோது முனிராபேகம், தரகா்கள் ஜானகிராமன், துரைசாமி ஆகியோா் அவருக்கு மிரட்டல் விடுத்தனராம். எனவே, இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ்விடம் விவேக் புகாா் அளித்தாா். அதன்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டாா்.

இதனடிப்படையில் கடந்த அக்டோபா் மாதம் உதவி ஆய்வாளா் அன்பழகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதில் 3 பேரும் சோ்ந்து விவேக்கை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான முனிராபேகத்தை போலீஸாா் தேடி வந்த நிலையில் அவா் தஞ்சாவூரிலுள்ள தனது தாயாா் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், விக்கிரமன் உள்ளிட்டோா் தஞ்சாவூருக்குச் சென்று சனிக்கிழமை முனிராபேகத்தை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com