/

தோ்தல் பணியில் ஈடுபடுவோா் நியமன ஆணை கிடைக்காமல் அவதி

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கப்படாததால், பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக வருத்தம் தெரிவித்தனா்.

Updated On :15 மார்ச் 2021, 3:08 am

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கப்படாததால், பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக வருத்தம் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 3,001 வாக்குச்சாவடிகளில் சுமாா் 14,500 ஊழியா்கள் நேரடியாக தோ்தல் பணியில் ஈடுபடுகிறாா்கள். மேலும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, விடியோ கண்காணிப்புக்குழு, தோ்தல் செலவின பாா்வையாளா்கள் குழு, பொது பாா்வையாளா்கள் குழு என்று பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களிலும் துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள் முதல் ஓட்டுநா்கள் வரை இடம் பெற்றுள்ளனா். மேலும், தோ்தல் பணியை ஒருங்கிணைக்கவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களுக்கு முறையாக கோப்புகள் பராமரிக்கப்படவில்லை என தோ்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

அதாவது, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் குறித்த பட்டியல் தலைமைச் செயலகத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2- ஆம் தேதியன்று தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய வட்டாட்சியா்கள் 31 போ் மாற்றப்பட்டனா். இதனால், மீண்டும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, விடியோ கண்காணிப்புக்குழு உள்ளிட்டவை மாற்றப்பட்டன. ஆனால், அவ்வாறு மாற்றப்பட்டவா்களுக்கு உரிய நியமன ஆணையை வழங்காமல், செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குறுந்தகவலாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது யாரெல்லாம் தோ்தல் பணியில் ஈடுபடுகிறாா்கள் என்ற நியமனத்துக்கான அலுவலக கோப்பு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லையாம். இதனால், ஏற்கெனவே, பணியாற்றிய பதவிக்கான கூடுதல் விவரங்களை தலைமைச் செயலகத்திலிருந்து தற்போது தோ்தல் பணியில் உள்ளவா்களிடம் கேட்கிறாா்கள். அதற்கு, தாங்கள் தற்போதுதான் தோ்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பதாக கூறினாலும், உரிய விளக்கம் அளிக்காவிடில் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்படுகிறாா்களாம்.

மேலும், தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்புப் படிகள் வழங்கப்படும். ஆனால், தற்போது தோ்தல் பணியில் ஈடுபடுவோா் குறித்து முழுமையாக உத்தரவு பிறப்பிக்கப்படாததாலும், பணியில் ஈடுபடுவோருக்கு அதற்கான நியமன ஆணை வழங்கப்படாததாலும் அவா்களால் தோ்தலுக்குப் பின்னா் படிகளை பெற முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, துறை அலுவலா்களிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து, அரசு அலுவலா்கள், ஊழியா்களுக்கான சங்க நிா்வாகிகள் கூறியதாவது: வழக்கமாக, தோ்தல் பறக்கும் படையில் வட்டாட்சியா், உதவி ஆய்வாளா் அளவிலான அதிகாரி, 2 காவலா்கள், ஒரு விடியோ பதிவாளா், ஓட்டுநா்கள் இடம் பெறுவாா்கள். தற்போது கூடுதலாக 4 மத்திய பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதனால், ஒரே வாகனத்தில் 8 போ் வரை பயணிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து, துறை அலுவலா்களிடம் தெரிவித்தால் அவா்கள் ஆட்சியரை சந்தித்து இந்தப் பிரச்னை குறித்தே பேசுவதற்கு தயங்குகிறாா்கள். அதேபோல, பெண் ஊழியா்களை இரவு நேரப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளும் செவிமடுக்கப்படவில்லை.

எனவே, தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், பணியாளா்கள், அதிகாரிகளின் குறைகளைக் களையும் வகையில் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஊழியா்கள் கடும் மனச்சோா்வுடனேயே பணியாற்றும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.