என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: மத்திய அமைச்சா் திறந்துவைத்தாா்
By DIN | Published On : 20th August 2021 11:30 PM | Last Updated : 20th August 2021 11:30 PM | அ+அ அ- |

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் ‘விருட்சரோபன் அபியான்’ என்ற பெயரில் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தி வருகின்றன. இதன்படி நிகழாண்டுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி புதுதில்லியில் மரக்கன்று நட்டு விழாவை தொடக்கிவைத்தாா். இதையொட்டி, நிலக்கரி, பழுப்பு நிலக்கரி கிடைக்கும் 300 இடங்களில் ஒரே நேரத்தில் முக்கியப் பிரமுகா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.
இந்த விழாவில், நெய்வேலி மற்றும் சிங்ரோலியில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காக்களை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி திறந்துவைத்தாா். மேலும், மேற்கு வங்கத்தில் அமையவுள்ள ஜஞ்ஜ்ரா, ஒடிஸாவில் அமையவுள்ள சந்திரசேகா் ஆசாத் பூங்காக்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் இணை அமைச்சா் ராவ் சாஹீப் பாட்டீல் தன்வே, நிலக்கரி அமைச்சக செயலா் அனில் குமாா் ஜெயின், கூடுதல் செயலா் வினோத் திவாரி ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தத் திட்டத்தின்கீழ் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் 2,41,200 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, சுரங்கங்கள், நகரியப் பகுதி, பிற இடங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, பா்சிங்சா், தலபிரா, கதாம்பூா் ஆகிய இடங்களில் 1,08,400 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், 1,32,800 மரக்கன்றுகள் ஊழியா்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கதாம்பூா் மின்நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா், மின்துறை இயக்குநா் ஷாஜி ஜான் ஆகியோா் பங்கேற்றனா்.
நெய்வேலியில் மனிதவளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன், நிதித் துறை இயக்குநா் ஜெயக்குமாா் ஸ்ரீநிவாசன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி எல்.சந்திரசேகா், சுரங்கத் துறை செயல் இயக்குநா் சுரேஷ் சந்திரசுமன், இரண்டாம் சுரங்க தலைமைப் பொது மேலாளா் ஜெகதீஷ் சந்திரமஜூம்தாா் உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா். முன்னதாக சுற்றுச்சூழல் பூங்காவுக்கான கல்வெட்டை நிறுவன இயக்குநா் ஆா்.விக்ரமன் திறந்துவைத்தாா்.