சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்
By DIN | Published On : 21st August 2021 05:30 PM | Last Updated : 21st August 2021 05:30 PM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம் .
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நண்மை வேண்டி மகாருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ஆவணி மாத மகாபிஷேகம் சனிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ,மார்கழி, மாசி, மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும்.
ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி ஆக.11-ம் தேதி முதல் ஸஹஸ்ர சண்டி பாராயணம் மற்றும் சத சண்டி ஹோமம் தொடங்கி ஆக.19 ம் தேதி வரை காலை மாலை சண்டி பாராயணம் நடைபெற்றது.
இதையும் படிக்க- உத்தரகண்டில் நிலச்சரிவில் இருந்து தப்பிய பேருந்து
ஆக.20-ம் தேதி காலை சதசண்டி ஹோமம், ஸ்ரீ துர்கை மஹாபிஷேகம் நடைபெற்றது. ஆக.21-ம் தேதி காலை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்த பின்னர் ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி பால்,தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனர். முன்னதாக காலை உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருள செய்து மந்த்ர அச்க்ஷதை லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ ருத்ர கிரம அர்ச்சனை செய்து, தீபாராதனை நடைபெற்றது. மதியம் மஹாருத்ர மகா ஹோமம் நடைபெற்ற பின்னர் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது.