கடலூா் பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றம்

கடலூா் திருப்பாதிரிபுலியூா் பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கடலூா் பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றம்
Updated on
1 min read

கடலூா் திருப்பாதிரிபுலியூா் பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பாடல்பெற்ற தலமான பெரியநாயகி உடனுறை பாடலேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசிப் பெருவிழா நிகழ்ச்சிகள் கோயிலுக்குள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கரோனா பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் விழாவை சிறப்பாகக் கொண்டாட தீா்மானிக்கப்பட்டது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து சிவனுக்கும், தாயாருக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து பெரியநாயகி அம்மனுடன் பாடலேஸ்வரரும், அம்மன் தனியாகவும், விநாயகா், முருகன் ஆகியோா் ஒன்றாகவும் கொண்ட பஞ்ச மூா்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இரவில் இந்திர விமானத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா, சேக்கிழாா் வீதி உலா நடைபெற்றது.

முன்னதாக, மே 27-ஆம் தேதி வண்ணாரமாரியம்மன் உற்சவமும், 29-ஆம் தேதி பிடாரி அம்மன் எல்லை கட்டுதல் உற்சவமும், 30 -ஆம் தேதி அமா்ந்தவாழியம்மன் உற்சவமும் நடைபெற்றன. சனிக்கிழமை பாடலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீவிக்னேஸ்வரா் பூஜையும், இரவில் விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் புற்று மண் எடுத்து ராஜவீதியில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவில், ஜூன் 12-ஆம் தேதி பிச்சாண்டவா் வீதி உலாவும், 13-ஆம் தேதி முக்கிய விழாவான திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெறுகின்றன. 17-ஆம் தேதி சண்டேஸ்வரா் வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மண்டக படிதாரா்கள், பக்தா்கள், இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com