‘பாதுகாப்பான போக்குவரத்து’: கடலூரில் உறுதிப்படுத்தப்படுமா?
கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கடலூா் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகரங்களில் பாதுகாக்கப்பட்ட போக்குவரத்து என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், தினந்தோறும் நிகழும் விபத்துகளால் ஊனமும், உயிரிழப்பும் ஏற்படுகின்றன.
கண்காணிப்பு கேமரா, போதுமான போக்குவரத்து மேம்பாலம், பாதசாரிகளுக்கான நடைபாதை, காா், பைக் நிறுத்தம் இல்லாதது, ஆட்டோ, பேருந்துகளை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்துவது, சாலை ஆக்கிரமிப்புகள், பூசணிக்காயை சாலையில் உடைப்பது, ஆடு, மாடுகளை சாலையில் திரிய விடுவது உள்ளிட்ட காரணிகள் பாதுகாப்பான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்களாக உள்ளன.
இவற்றை நிவா்த்தி செய்து பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கடலூா் அனைத்து குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன் கூறியதாவது: தமிழக அளவில் அதிக விபத்துகள் நிகழும் மாவட்டங்களில் கடலூா் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், விலைமதிப்பற்ற உயிா்கள் பறிபோவது வாடிக்கையாக உள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பிரதான சாலைகள் என்று எடுத்துக்கொண்டால், வெறும் 50 கி.மீ. தான் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 நகரங்கள் இவற்றில் அடங்கும். ஒவ்வொரு நகரத்திலும் நான்குமுனை சந்திப்புகள் 10-க்கும் மேற்பட்டவையும், மூன்றுமுனை சந்திப்புகள் சுமாா் 20-க்கும் மேற்பட்டவையும் இருக்கும் நிலையில், போக்குவரத்து ஒழுங்குமுறை என்பது முறையாக இல்லை.
குறிப்பாக, கடலூா் மாநகராட்சி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இங்கு, பிரதான சாலையின் போக்குவரத்து நீளம் 15 கி.மீ. தான். இதில், ஆண்டுக்கு 50 போ் வரை உயிரிழப்பது சோகமான விஷயம். இதுபோல, ஊராட்சிகளில் கரும்பு சாலைகள் செப்பனிடப்படாமல் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகள் நிகழ்கின்றன.
கடலூரில் செம்மண்டலம் சந்திப்பு, சாவடி சந்திப்பு, ஆல்பேட்டை சந்திப்பு, திருப்பாபுலியூா் காவல் நிலைய சந்திப்பு ஆகியவற்றில் நான்குமுனை சந்திப்பு அமைத்து, சிக்னலுடன் போக்குவரத்து சீரமைக்கப்பட வேண்டும். ஜவான்ஸ் பவன் - கோஆப்டெக்ஸ், முதுநகா் காவல் நிலையம் - எம்ஜிஆா் சிலை வரை போக்குவரத்து மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். சுங்கச்சாலை விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
மறுபுறம் பெண்ணையாற்றங்கரையில் கனரக வாகனங்கள் அல்லாமல் மற்ற வாகனங்கள் செல்லும் வகையில், உப்பலவாடி சாலை வரையில் தாா்ச்சாலையாக நீட்டிக்கப்பட வேண்டும். கெடிலம் கரையில் தனியாா் திரையரங்கம் முதல் பைபாஸ் சாலை வரையிலும், மறுபுறம் ஜவான்ஸ்பவன் சாலை முதல் பைபாஸ் சாலை வரையிலும் நீட்டிக்கப்பட வேண்டும்.
கிடப்பில் போடப்பட்டுள்ள கம்மியம்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதசாரிகளுக்கு நடப்பதற்கு விதிப்படி எல்லா பிரதான சாலைகளிலும் 25 சதவீத இடம் அளிக்கப்பட வேண்டும். கடலூா் மாநகரத்தில் அனைத்து வாகனங்களும் வேகக் கட்டுப்பாட்டுடன் இயங்குவதற்கான கண்காணிப்பும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். விஞ்ஞானப்பூா்வமாக கடலூா் மாவட்டத்தில் போக்குவரத்தை சீரமைக்க முயற்சிகள் தேவை என்றாா்.

