கடலூர்
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரம், மே 9: சிதம்பரம் அருகே போலீஸாா் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணியில் புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே, இரு பக்கமும் இருந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்த நிலையில், நிலம் எடுப்பு வட்டாட்சியா் கீதா தலைமையில், மின் வாரிய உதவி இயக்குநா் சரண்யா, புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் சுஜாதா ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது, கட்டட உரிமையாளா்கள் கால அவகாசம் கேட்டனா். ஆனால், ஏற்கெனவே அதிக கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது, இனிமேல் அவகாசம் தர முடியாது எனக் கூறி, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா்.