பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்தவா் டிராவிட் (23). இவா், 15 வயது சிறுமிக்கு கடந்த 12.7.2021 அன்று பாலியல் தொல்லை கொடுத்தாா். அப்போது, சிறுமியின் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் தந்தையை டிராவிட் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிா் போலீசாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிராவிட்டை கைது செய்தனா்.

இதுதொடா்பாக கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். பின்னா், இவ்வழக்கு கடலூா் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது.

அதன்படி நீதிபதி குலசேகரன், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் டிராவிட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com