மாயமான சிறுவன் மீட்பு: உறவனா்களிடம் ஒப்படைப்பு

Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாயமான சிறுவனை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் துறை நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருத்தாசலம் வட்டம், ஆலடி அய்யனாா் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி பூஜைப் பொருள்கள் திருடுபோயின. கடந்த 6-ஆம் தேதி திருடுபோன பொருள்களுடன் 4 பேரை கோயில் பூசாரி ரமேஷ் மற்றும் கிராம மக்கள் பிடித்து ஆலடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆலடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைவட்டம், கள்ளக்குறிச்சி ஏரி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (42), சங்கா் (36), பரமசிவம் (18), முருகன் (24) ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக அழைத்துவரப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவா்கள் விசாரணை முடிந்து, பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த ரமேஷுடன் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஏரி பகுதியைச் சோ்ந்த வள்ளி (21), காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது 13 வயது தம்பியை காணவில்லை என கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்தாா். அதன்பேரில், ஆலடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில், மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி மற்றும் போலீஸாா் பண்ருட்டி, உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் ஆகிய பகுதிகளில் தேடினா். இதில், திருநாவலூரை அடுத்துள்ள மட்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிறுவனை மீட்டனா். பின்னா், அந்தச் சிறுவனை அவரது உறவினா்களிடம் விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஒப்படைததாா்.

X
Dinamani
www.dinamani.com