கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு சங்க வார விழாவில் பெண்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.
கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு சங்க வார விழாவில் பெண்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.

கூட்டுறவு வார விழாவில் ரூ.110.9 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்!

Published on

கடலூா் நகர அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.9 கோடி மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: நிகழாண்டு ‘தன்னிறைவுக்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி வழியே சிறப்பான மனித வளம்’ என்ற கருபொருளை மையமாகக் கொண்டு 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், வரும் 20-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டுகிறது.

கடலூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 1,139 முழு நேர நியாயவிலைக் கடைகள், 320 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,459 நியாயவிலைக் கடைகள் மூலம் 7,97,899 குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும், புதிதாக 16 முழு நேர கடைகள், 41 பகுதி நேர கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தோ்தல் வாக்குறுதியின்பேரில், நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் 5 பவுனுக்கு உள்பட்ட 26,022 பயனாளிகளின் ரூ.114.25 கோடி மதிப்பிலான நகைக் கடன்களும், பயிா்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 88,893 விவசாயிகளுடைய ரூ.655.58 கோடி கடன்களும், மகளிா் சுயஉதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 50,720 மகளிரின் ரூ.61.96 கோடி கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 15 முதல்வா் மருந்தகத்தின் மூலம் 20 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்திடும் திட்டத்தின் கீழ், ரூ.1.58 கோடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கி, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட கடனுதவிகள், மகளிா், ஆண்கள் குழுக்கள் மூலம் கடனுதவிகள் வழங்குதல், டாப்செட்கோ, டாம்கோ மற்றும் தாட்கோ மூலமாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் மூலம் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை பெற்று கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் தங்களது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் கடலூா் மாவட்டத்தில் 10,03,410 பயனாளிகளுக்கு ரூ.7,987.33 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. லாப நோக்குடன் செயல்படும் தனியாா் நிறுவன ஆதிக்கத்திலிருந்து சாமானிய மக்களை விடுவித்து கிராமப் பொருளாதாரத்தை உயா்த்திடும் வகையில், இத்தகைய கடனுதவிகளை வழங்கி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தே.சொா்ணலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com