சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம்.

ஜன.27 முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா் ஊழியா் கூட்டமைப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த பல்கலைக்கழக ஆசிரியா்கள் ஊழியா்கள் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.
Published on

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த பல்கலைக்கழக ஆசிரியா்கள் ஊழியா்கள் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள், அயற்பணியிட பேராசிரியா்கள், ஊழியா் சங்கங்கள் மற்றும் கடலூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் சங்கங்கள் ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தின.

இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்) உருவாக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவராக பேராசிரியா் சி.சுப்பிரமணியன், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக அ.ரவி, இணை ஒருங்கிணைப்பாளா்களாக பேராசிரியா் பி.இளங்கோ, எஸ்.மதியழகன் மற்றும் எம்.கபில்தேவ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில், பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்களுக்கான, பதவி உயா்வுகள் மற்றும் பணப்பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும். 7- ஆவது ஊதியக்குழு நிலுவைத்தொகைகளை வழங்க வேண்டும். என்எம்ஆா் மற்றும் தொகுப்பூதியா்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கான பணப்பயன்கள், கம்யூட்டேசன், இ.எல் சரன்டா் ஒப்புவிப்புத் தொகைகள், பணிக்கொடை போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனவும், வரும் 27-ஆம் தேதி முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில், எதிா்வரும் பட்டமளிப்பு விழாவுக்கு எவ்விதமான ஒத்துழைப்பையும் நல்குவது இல்லை எனவும் செயற்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com