கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே கிராம உதவியாளரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (58). இவா், இந்தக் கிராமத்தில் கிராம உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், வெள்ளப்பாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன், உதவியாளா் சக்திவேல் ஆகியோா் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தினா். அதன்படி, தகுதியான பயனாளிகளின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளரிடம் வழங்கினராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் கிராம உதவியாளா் சக்திவேல் வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா், சஞ்சீவி ஆகியோா் எங்கள் பெயா் ஏன் விடுபட்டது எனக் கேட்டு சக்திவேல், அவரது மனைவி கம்சலா, மகன் புஷ்பராஜ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சீவியை (39) கைது செய்தனா். மேலும், அருண்குமாரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








